நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சில படங்கள் பார்க்கவேண்டிய லிஸ்டில் இருக்கும் ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அது அப்படியே கிடப்பிலேயே இருக்கும். என்ன செய்வது என்று தெரியாத; புட்டத்தை தரையில் வைத்து, விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாளிலோ அல்லது எதையோ தேடும்போதோ; அது நம் கண்ணில் பட்டு அன்றைய தினம் அதற்க்கு பிறவிப் பயன் கிட்டி, நம் பார்வைக்கு விரியும்.
அவ்வாறே இந்த படம் பார்க்கவேண்டும் என்று விரும்பியே டவுன்லோடினேன். ஆனால் விடுமுறைகள், ஊர்சுற்றுதல் என்று ஒரு இரண்டு மாதமாக படங்களே பார்க்க முடியவில்லை. அண்ணன் ராஜு இந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதியதுமே அட!! இந்த படம் நம்மிடமே இருக்கே..? என்று தோன்றியது, அன்றிரவே அதைக் கண்டு களித்தேன்.
பதின்பருவத்தில் சில காலம் தின்பதர்க்கே உயிர் வாழ்ந்தேன் என்று சொல்லலாம். அனால் இப்பொழுது பல நேரம் பச்சை காய்கறிகள்தான் (பின்ன வயிறு வண்ணான் சால் போல் பெருத்துக்கொண்டே போனால்). நாக்குலே வாழ்ந்த காலம் போய் இப்போ வாக்குலே (WALKING) வாழ்கிறேன்.
ருசிக்குத் தின்பவனைவிட பசிக்குத் தின்பவன்தான் நம்நாட்டில் அதிகம். ஆனாலும் முதல் கவளம் வயிற்றை அடைந்ததும்..., நாக்கு ருசியைத் தேடும். இந்தப் படமும் அப்படி ஒரு சுவை தேடும் படலமே.
பெயர் போடும்போதே பல வகை உணவுகளை காட்டிக்கொண்டே வருகிறார்கள். நாக்கில் வாட்டர் பால்ஸ் வந்து வீடே ஈரமானதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். புட்டு, நேந்திரம்பழ பஜ்ஜி தவிர்த்து வேறு எந்த உணவின் பேரும் எனக்குத் தெரியவில்லை; ஆமா பேரா முக்கியம் அள்ளி அள்ளி சாப்பிடுவதை விட்டு விட்டு என்ன பேச்சு.
ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஏதாவது ஒரு உணவு வருவதுமாதிரி பார்த்துப் பார்த்து எடுத்திருக்கும் விதத்தை வைத்தே டைரெக்டரின் விருப்பத்தை தெரிந்து கொள்ள முடிகிறது.
இரு காதல் கதை, அதில் ஒன்று நடுவயது காதல். அது பூக்கும் விதமும் நாளொரு சுவையும் பொழுதொரு சமயளுமாய் சமைகிறது. லாலும் சுவேதா மேனனும் தத்தமது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அருமையான திரைகதை அமைத்து இல்லை இல்லை சமைத்து பரிமாறி இருக்கிறார் ஆசிக் அபூ.
லால் பார்க்கப் போகும்போது, அங்கே குழி அப்பம் வைக்கிறார்கள், லால் பெண்ணிடம் "யார் இதைச் செய்தது...?" என்று கேட்கிறார் பெண் "தான்தான்" என்று சந்தேகமாக தலை அசைக்கிறார். மறுமுறை லால் கேட்கவும் "இல்லை! வேலைக்காரன்" என்று சொல்கிறார். லால் "சமையலறை எங்கிருக்கிறது...?" என்று கேட்டு அங்கே போகிறார். அங்கே மாவாட்டிக் கொண்டிருக்கும் பாபுராஜைப் பார்த்து லால் "என்னோடு வரியா....?" என்று கேட்கிறார் உடனே பாபுராஜ் கிளம்பி வந்துவிடுகிறார். லால் பாபுராஜ் நடுவில் உள்ள பாசப் பிணைப்பு அற்புதம்.
இதை பிரகாஷ்ராஜ் தமிழில் எடுக்கிறாராம் கண்டிப்பாக இது ஒரு FEEL GOOD MOVIE.
No comments:
Post a Comment