Pages

'கொசப்பேட்டையில் இருந்து கிருஷ்ணாம்பேட்டை வரை' - பருவம் ஐந்து

 உங்கள் சீட் பெல்ட்டை இறுக்கிக் கொள்ளுங்கள். நாம் காலத்தை விட வேகமாக பின்னோக்கிச் செல்வோம்.  அப்பொழுது கதைசொல்லிக்கு அகவை மூன்று, அர்ணாகயிறு கூட இல்லாமல் கிங்கினி மங்கினி என்று சுற்றிக்கொண்டிருந்தான். 

என் தந்தை வருவதற்கு முன்பே இங்கே அவரது அக்கா, தங்கை இருவரும் வாக்கப் பட்டிருந்தனர். அதுவுமில்லாமல் அம்மாவின் உறவினர்களும் சென்னையில் இருந்தனர்அடிப்படையில் நெசவாளியான அப்பா அவரின் சித்தப்பாவின் பேருதவியால் மின்சார துறையில் தினக்கூலியாக பள்ளம் தோண்டும் வேலைக்கு சேர்ந்தார்இன்றும் எங்கள் குடும்பம் அவர்கள் குடும்பத்துக்கு நன்றி கடன் பட்டிருக்கிறது.

முதலில் நாங்கள் மைலாப்பூரில் அப்பாவின் அத்தை வீட்டில் வாடகைக்கு இருந்தோம்,  (இந்த வீட்டின் நினைவுகள் அம்மா சொல்லக் கேட்டது) மயிலாப்பூர் பஜார் சாலையை ஒட்டி இருந்த முட்டுச் சந்தில் அந்த வீடு இருந்தது.   இந்த சாலை கச்சேரி சாலையிலிருந்து, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வரை நீளும். இங்கு ஒரு கடையில் மெது பக்கோடா போடுவார்கள் இன்றும் அந்த கடை இருக்கிறது தரமான மெதுபக்கோடாஇந்த சாலையில்தான் மார்க்கெட்டும் இருக்கிறது.

அங்கிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்  கிழமையும்… உறவினர்களை காண 'ஐஸ் ஹவுஸு’க்கு நடந்தே வருவோம்நானும் தம்பியும் அப்பாவின் மிதிவண்டியில் உட்கார்ந்துக் கொள்ள, அப்பா வண்டியை தள்ளிக்கொண்டே வருவாராம்என்றாவது அத்திப் பூக்கும் நாளில்.... இரவில் 'ரத்னா  கபே'வில் உணவருந்திவிட்டு நடந்தே வீடடைவோம்பேருந்தென்றாலும் அதுஅம்பட்ட வாராவதி’ (Hamilton Bridge) இறங்கி இடதுபுறம் திரும்பி நின்றுவிடும். (அப்படியே கடற்கரைசாலை வந்து திரும்பவும் ஐஸ் ஹவுஸ் வரும்).  பேருந்து கட்டணம் அறுபது பைசாஅம்பட்ட வாராவதி முழுவதுமே அதைச் சுற்றியிருப்போருக்கு திறந்தவெளிக் கழிவறை, நாங்கள் அப்பகுதியை கடக்கும்போதெல்லாம்… இலவசக் கழிவறைக் காட்சிகள் விருந்தாகும்இன்று சிட்டி சென்டர் இருக்குமிடம் மிகப்பெரிய மாட்டுக் கொட்டகையாக இருந்ததுஎதிரே ஒரு விறகுக்கடை இருந்தது.

வீட்டின் எதிரில் ஒரு பேட்டை இருந்தது அதில் கிட்டத்தட்ட பதினைந்து ஒண்டுக் குடித்தனங்கள் இருந்ததுஅதில் ஒரு ஆயா ஆப்பம் சுட்டு விற்கும், கைராசி என்று சொல்லி அடியேனுக்குதான் எப்பொழுதுமே பூர்ணகும்ப முதல் ஆப்பம், நான் போகவில்லை என்றாலும் எனக்காகக் காத்திருந்து, பலவிதங்களில் தாஜா செய்து கூட்டிச் செல்வார்கள்ஒரு நாள் அம்மாவிடம் கோபித்துக் கொண்டு கழிவறையில் சென்று பூட்டிக் கொண்டு வெளிவர முடியாமல் மாட்டிக்கொண்டது மங்கலாக நினைவிருக்கிறதுஅங்கிருக்கும் எந்த வீட்டுக்குள்ளும் நான் எந்த நேரத்திலும், அத்துமீறி நுழைந்து வேறொரு வீட்டின் வழியே வெளிவரும் சுதந்திரம் பெற்றவனாய் இருந்தேன்அவ்வீட்டின் பெண்களுக்கு நான் உயிருள்ள பொம்மைநான் ஊரானால் சீராட்டி வளர்க்கப்பட்ட பிள்ளை.

;

'கொசப்பேட்டையில் இருந்து கிருஷ்ணாம்பேட்டை வரை' --A true time travel

சென்னைக்கும் எனக்குமான பழக்கம் நான் பிறந்ததிலிருந்து தொடங்குகிறதுஆம்! நான் சென்னைக்காரன், வெளிமாநிலத்திலோ, நாட்டிலோ என்னனை மதராஸி என்றழைப்பார்கள்நானும் மதராசியாகவே இருக்க விரும்புகிறேன்.   பின்புறம் கிழிந்த கால்ச்சட்டையை மட்டுமே அணிந்து தெருவெங்கும் இந்நகரத்தின் வெயிலைச் சுமந்து சுற்றியிருக்கிறேன்எந்தெந்த நாடோ, ஊரோ சுற்றியியலைந்தாலும், நினைவில் மதராஸை சுமந்தலையும் அக்மார்க் மதராஸி நான்சொந்த ஊர் பல்லவ நகரமென்றாலும், எப்பொழுது யார் என்னைக் கேட்டாலும்…மதராஸி’ என்றே சொல்லுவேன், அதில் ஒரு சிறு மிதப்பிருக்கும்சேரளநாட்டினர் போல்…. என் தாய் நாடு மதறாஸ்தான்.

 

சுனாமி, நிலநடுக்கம், வெள்ளம் போன்ற பேரிடர் நாட்களிலும்,  விநாயகர் ஊர்வல மற்றும் கோவை குண்டுவெடிப்பு கலவர  நாட்களிலும், இப்பொழுது இந்த கிருமித் தோற்று பயத்திலும் நான் இந்த நகரத்தை விட்டு வெளியேற விரும்பியதில்லை.  இந்த ஊர் தான் எனக்கு சோறுபோட்டது என்பதைத் தாண்டி, இந்நகரம்தான் எல்லாவற்ற்றையும் தந்தது. அவ்வாறு நோக்கின் என்னைப் போலவே இந்நகரமும் நீளத்திலும், அகலத்திலும் அதீத வளர்ச்சி அடைந்திருக்கிறது, அடைந்துக் கொண்டிருக்கிறது.

 

மதராசுக்கும் எனக்குமான பந்தத்தையும், எங்களின்  பயம், கோபம், வெறுப்பு, அருவருப்பு, அழுகை, துக்கம், தூக்கம், தனிமை, துயரம் ஆகியவற்றை அசைபோடும் ஒரு சிறு பின்னோக்கிய பயணமே 'கொசப்பேட்டையில் இருந்து கிருஷ்ணாம்பேட்டை வரை' இத்தொடர்.  வாருங்கள் என்னுடன் சேர்ந்து காலஎந்திரத்தில் பயணிப்போம்.

;

North 24 Kaantham - மலையாள சினிமா



பொதுவாகவே பயணங்களை வைத்து எடுக்கப்படும் படங்களில் அன்பை அடிநாதமாக வைத்து தைத்திருப்பார்கள்.  இதுவும் அவ்வாறே. 

ஃபஹத் ஃபாசில் Obsessive Compulsive Personality Disorder இருக்கும் ஒரு மென்பொருள் இளைஞ்சர்.  அவரின் சிடுசிடுப்பாலும் அதீத சுத்த பத்த நடவடிக்கைகளாலும் அவரை யாருக்குமே பிடிக்காமல் போகிறது.  அவரது அலுவலகத்தில் அவரை தந்திரமாக திருவான்றத்துக்கு ஒரு'Webinaar'காக அனுப்புகிறார்கள்.

ரயிலில் பெரியவர் நெடுமுடி வேணு; தன் மனைவிக்கு உடம்பு முடியாத நிலையில்... திரும்பி தன் வீட்டுக்கே போக எத்தனித்து; எதிர்வரும் நிறுத்தத்தில் இறங்குகிறார்.  அவருடன் சமூக சேவகி சுவேதாவும், நம்ம ஃபாசிலும் இறங்குகிறார்கள்.  அவர்கள் நெடுமுடி வேணு வீட்டிற்கு எப்படி திரும்புகிறார்கள் என்பதை மிக மிக சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கேரளாவில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கண்டிப்பாக கடையடைப்பு, வேலை நிறுத்தம் என்று இருக்கும்.  இவர்கள் மூவரும் அவ்வாறு ஒரு வேலை நிறுத்த நாளில்தான் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள்.  யாரோ சில அயோக்கிய அரசியவாதிகளின் சுயநலத்தில் பொதுமக்களின் அன்றாடம் எப்படி கலைத்துப் போடப் படுகிறது என்பதில்தான் படம் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பயணத்தில் ரயில், பேருந்து, படகு, தோணி, ஆட்டோ போன்ற கேரளாவின் எல்லா வகையான போக்குவரத்தையும் கொண்டுவந்திருப்பது இயக்குனரின் வெற்றி.


பாதி 'அந்நியன்' அம்பியும், மீதி சுத்த விரும்பியுமான ஃபாசில் இந்த பயணத்தில் எப்படியெல்லாம் கொஞ்ச கொஞ்சமாக மாற்றம் பெறுகிறார்; என்பதை அவர்களுடன் பயணிக்கும் நாமே யூகிக்க முடித்தது போன்ற திரைகதை அற்புதம்.

நெடுமுடி வேணுவின் பன்மொழித்திரமை, உறவுகளை; உயிர்களை நேசிக்கும் பாங்கு, தேர்ந்த வாசிப்பனுபவம் என்று போகிற போக்கில் அவரின் அனுபவம் அரசியல் சார்பு என்று எல்லாவற்றையும் மிக நேர்த்தியாய் பார்வையாளனுக்கு கடத்திச் செல்கிறார் இயக்குனர்.

இந்த மாதிரி படத்தில் கண்டிப்பாக பிரதான உதவி ஒரு சமூக சேவகர் / சேவகி மூலமாகத்தான் வரும்.  இதிலும் நாயகி ஸ்வேதா அவ்வாறே வருகிறார் ஆனால் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.

ஸ்டின்ட் கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள், கதையில் திருப்புமுனையே என்னால்தான் அதனால்தான் இதில் நடித்தேன்... என்று அளந்து விடுவார்கள், ஆனால் உண்மையிலேயே நம்ம பிரேம்ஜி அமரனுக்கு இதில் கதையை சரியான போக்கில் திருப்பும் விசையான கதாபாத்திரம்.  நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள் பிரேம்ஜி, இதில் என் கதாபாத்திரம்தான் கதையின் திருப்புமுனை என்று. 

அவர் மனைவியாக வரும் கனியின் ஒரு வெட்கப் புன்னகை ஆயிரம் கால காதலை அரைநொடியில் உணர்த்திவிடுகிறது.

இயக்குனர் அனில் ராதாக்ருஷ்ண மேனனின் முதல் படம்; அசத்தியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டியப் படம் என்பதில் ஐய்யமேதுமில்லை.

Directed byAnil Radhakrishnan Menon
Produced byC. V. Sarathi
Written byAnil Radhakrishnan Menon
Starring
Music byGovind Menon, Rex Vijayan
CinematographyJayesh Nair
Editing byDilip

 


 
;

50 SHADES OF GREY - புத்தக விமர்சனம்



ஏறாடிக் வகை நாவலுக்கும் போர்ன் வகைக்கும், ஒரு சின்ன இடைவெளிதான் மனித உணர்ச்சிகளை காமத்துடன் அப்பட்டமாக சித்தரித்தால் அது ஏறாடிக் வகை, அப்படி இல்லை எனில் அது போர்ன் வகையில் சாரும்.
 
(ஊம்) என் ரத்தம் சூடேறியது, கால்கள் விறைத்துக் கொண்டன, என் பெண்மையை தூண்டின... போன்ற  மாசாலாக்களைத் தூவி அழகுபடுத்தினால் அது ஏறாடிக் வகை
இல்லாமல் தட்டையாக காமத்தை மட்டும் செப்புமானால் அது சரோஜாதேவி வகையில் சேர்க்கப் படுகிறது. 
 
இந்த நாவல் முதல்வகையில் சேர்கிறது ஏனென்றால் இதில் மானே தேனே போட்ட காமம் வருகிறது.  இது முப்பது நாடுகளில் எழுபது மில்லியன் வரை விற்பனைக் கண்டது, அதிவிரையில் விற்றுத் தீர்ந்தது. 
 
இது BDSM வகை புணர்வுகளை கொண்ட கதை.  (அப்படின்னா.... கமத்தோட மானே தேனே போட்டு உணர்வுகளுடன் பரிமாறப் பட்ட நாவல்).  சரளமான எளிய ஆங்கிலத்தில் சரியான விவரணைகளுடன் ஒரு கல்லூரி மாணவிக்கும் அழகான ஒரு மிகப் பெரிய இளம் வியாபார காந்தத்துக்கும் இடையேயான காதலுடன் கூடிய வதைப் புணர்வுகளை சொல்லிச் செல்கிறது. 
 
 அனா ஸ்டீல் வாஷின்டன் ஸ்டேட் யுனிவர்சிடியில் கடைசி பரிச்சைக்காக தன்னை தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், தன அறைத்தோழி கேட் செய்யவேண்டிய ஒரு நேர்காணலை செய்ய முதன்முதலில் கிறிஸ்டியன் க்ரேயை சந்திக்கிறாள், அது முதல் தொட்டு, அவர்கள் எவ்விதமெல்லாம் வகை வகையாகப் புணர்கிரார்கள் என்பதை எளிய நடையில் சொல்லிச் செல்கிறார் எல் ஜேம்ஸ்.

நாயகனும் நாயகியும், பார்த்த மூன்றாவது சந்திப்பிலேயே உறவு கொள்கிறார்கள்.  அனா தன் தத்துத் தந்தையை சிலாகிக்கிறாள், அவர் அவளது கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு வந்து அனாவின் காதலனையும் சந்திக்கிறார்.  இவர்கள் இருவருக்குமான உறவென்பது உன்னதமான தந்தை மகளுக்குமான உறவாக மிக நுட்பமாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

ஆனாலும் அனாவின் தாய் இப்பொழுது வேறு ஒருவருடன் இருக்கிறாள்.  அது எந்த விதத்திலும் அனாவின் தத்துத் தந்தை 'ரே'யை பாதிக்கவில்லை.  இங்குதான் இது ஒரு சிறந்த கலை நேர்த்தியான நாவலாக உருமாறுகிறது.  உறவுகளை அதனதன் போக்கில் புரிந்துகொண்டு சீரான நேர்கோட்டில் பயணிக்க வைக்கிறது.

ஒப்பந்த அடிப்படையில் உறவென்பது அனாவுக்கு உடன் பாடில்லைதான், ஆனால் அனா கிரேவின் பால் கொண்டுள்ள அதீத காதலால் அவனுடனான உறவை தொடர்கிறாள்.  இந்த குற்ற உணர்வு அவர்கள் ஒவ்வொரு உறவின் முடிவிலும் மரம்கொத்திப் போல் அவள் மனம் கொத்தி எடுக்கிறது. 

உறவின் முடிவில் தன்னைத்தானே அவள் சமாதானம் செய்வதுபோல் வாசகர்களையும் தன் பாத்திரத்தின் நிலையை உணரச் செய்கிறாள்.
 
இதன் இந்த வெற்றிக்கு இதை எழுதிய ஆசிரியர் பெண்னென்பதும் ஒரு காரணம்.  ஜேம்ஸ் ஒரு மீடியா பெர்சனாலிட்டி.  1987இல் திருமணம் ஆகி இரண்டு வாலிப மகன்கள் உள்ளார்கள்.

தமிழில் இதுபோல் வா மு கோமு, சாரு ஆகியோர் முயற்சிக்கிறார்கள், ஆனால் அது ஒரு ஆணின் பார்வையில் இருந்து சொல்லப்படுவதனால்... ஒரு சிறிய தயக்கமோ, அல்லது ஒட்டுதலோ இல்லாமல் இருக்கிறது.
;

சால்ட் & பெப்பர் - என் பார்வை



சில படங்கள் பார்க்கவேண்டிய லிஸ்டில் இருக்கும் ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அது அப்படியே கிடப்பிலேயே இருக்கும்.  என்ன செய்வது என்று தெரியாத; புட்டத்தை  தரையில் வைத்து, விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாளிலோ அல்லது எதையோ தேடும்போதோ; அது நம் கண்ணில் பட்டு அன்றைய தினம் அதற்க்கு பிறவிப் பயன் கிட்டி, நம் பார்வைக்கு விரியும்.

அவ்வாறே இந்த படம் பார்க்கவேண்டும் என்று விரும்பியே டவுன்லோடினேன்.  ஆனால் விடுமுறைகள், ஊர்சுற்றுதல் என்று ஒரு இரண்டு மாதமாக படங்களே பார்க்க முடியவில்லை.  அண்ணன் ராஜு இந்த படத்தைப் பற்றி விமர்சனம்  எழுதியதுமே அட!! இந்த படம் நம்மிடமே இருக்கே..? என்று தோன்றியது, அன்றிரவே அதைக் கண்டு களித்தேன்.

பதின்பருவத்தில் சில காலம் தின்பதர்க்கே உயிர் வாழ்ந்தேன் என்று சொல்லலாம்.  அனால் இப்பொழுது பல நேரம் பச்சை காய்கறிகள்தான் (பின்ன வயிறு வண்ணான் சால் போல் பெருத்துக்கொண்டே போனால்).  நாக்குலே வாழ்ந்த காலம் போய்  இப்போ வாக்குலே (WALKING) வாழ்கிறேன்.

ருசிக்குத் தின்பவனைவிட பசிக்குத் தின்பவன்தான் நம்நாட்டில் அதிகம்.  ஆனாலும் முதல் கவளம் வயிற்றை அடைந்ததும்..., நாக்கு ருசியைத் தேடும்.  இந்தப் படமும் அப்படி ஒரு சுவை தேடும் படலமே.

பெயர் போடும்போதே பல வகை உணவுகளை காட்டிக்கொண்டே வருகிறார்கள்.  நாக்கில் வாட்டர் பால்ஸ் வந்து வீடே ஈரமானதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.  புட்டு, நேந்திரம்பழ பஜ்ஜி தவிர்த்து வேறு எந்த உணவின் பேரும் எனக்குத் தெரியவில்லை; ஆமா பேரா முக்கியம் அள்ளி அள்ளி சாப்பிடுவதை விட்டு விட்டு என்ன பேச்சு.

ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஏதாவது ஒரு உணவு வருவதுமாதிரி பார்த்துப் பார்த்து எடுத்திருக்கும் விதத்தை வைத்தே டைரெக்டரின் விருப்பத்தை தெரிந்து கொள்ள முடிகிறது. 

இரு காதல் கதை, அதில் ஒன்று நடுவயது காதல்.  அது பூக்கும் விதமும் நாளொரு சுவையும் பொழுதொரு சமயளுமாய் சமைகிறது.  லாலும் சுவேதா மேனனும் தத்தமது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.  அருமையான திரைகதை அமைத்து இல்லை இல்லை சமைத்து பரிமாறி இருக்கிறார் ஆசிக் அபூ.

லால் பார்க்கப் போகும்போது, அங்கே குழி அப்பம் வைக்கிறார்கள், லால் பெண்ணிடம் "யார் இதைச் செய்தது...?" என்று கேட்கிறார் பெண் "தான்தான்" என்று சந்தேகமாக தலை அசைக்கிறார்.  மறுமுறை லால் கேட்கவும் "இல்லை! வேலைக்காரன்" என்று சொல்கிறார்.  லால் "சமையலறை எங்கிருக்கிறது...?" என்று கேட்டு அங்கே போகிறார்.  அங்கே மாவாட்டிக் கொண்டிருக்கும் பாபுராஜைப் பார்த்து லால் "என்னோடு வரியா....?" என்று கேட்கிறார் உடனே பாபுராஜ் கிளம்பி வந்துவிடுகிறார்.  லால் பாபுராஜ் நடுவில் உள்ள பாசப் பிணைப்பு அற்புதம்.

இதை பிரகாஷ்ராஜ் தமிழில் எடுக்கிறாராம் கண்டிப்பாக இது ஒரு FEEL GOOD MOVIE.
;

நரமாமிச பட்சினிகள்




சென்ற ஞாயிறன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வின் கேள்வித்தாள் வெளியானதில் அந்த தேர்வை ரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறார்கள்.


இமெயிலில் இருந்து வினாத்தாளை திருடியதாகவும் கூறப்படுகிறது.தர்மபுரி மாவட்டம் கம்பை நல்லூர் தேர்வு மையத்தில் பிடிபட்ட சுரேஷ்குமார், விடைத்தாளும் வைத்திருந்தார்.இந்த கேள்வித்தாள் சில மணி நேரத்துக்கு முன்பு தான் அவுட்டாகி இருக்க வாய்ப்பு இருக்கும். முன்கூட்டியே ஆகி இருந்தால் எப்படியும் வெளியே தெரிந்திருக்கும்.


மேலும் கேள்வித்தாள் அவுட் ஆன அடுத்த நிமிடத்திலேயே விடை கண்டுபிடிப்பது கடினம்.தேர்வாணையத்தில் வேலைப்பார்ப்பவர்களால் தான் எளிதில் விடை எடுக்க முடியும்.எனவே இந்த கேள்வித்தாள் வெளியானதில் அவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.


இந்த செய்தியை பத்தோடு பதினொன்னாக படித்துவிட்டு கடந்துவிட முடியாது. இந்த தேர்வு இரண்டாம்நிலை உயர்பதவிக்காக நடத்தப் படும் தேர்வு. இதை ஆறு லட்சத்து நாற்பதாயிரம் பேர் எழுதினார்கள். எவனோ ஒரு காலிப்பயல் செய்த திருட்டுத்தனத்தால் மொத்த தேர்வர்களின் உழைப்பை வீணாக்குவது எந்த விதத்தில் நாயம்.


இவர்களின் உழைப்பை, எத்தனை இரவுகளின் உறக்கத்தை, இத்தனைநாள் கனவை, எந்தனையோ தாய்களின் வேண்டுதலை, ஒரு இளஞ்சனின் ஒட்டுமொத்த ஆற்றலை, நம்பிக்கையை, லட்சியத்தை, ஒரு சிறு திருட்டுத்தனத்தால் ஆழிப் பேரலைபோல சுருட்டிவிடுவதும், மறுதலித்தலும் கயமைத்தனமன்றி வேறென்ன. இது அவர்களின் நம்பிக்கையை சிலுவையில் அறிதலைப் போன்றது. சக்தியுள்ளவன் புறவழியில் முயற்ச்சிக்கிறான் என்பது மற்றையோரையும் அவ்வாறே முயற்சி செய்யத் தூண்டாது என்பது என்ன நிச்சயம்.


எல்லா கல்லூரி படிப்பும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தரும் என்ற உத்திரவாதமில்லை, இன்னும் வாழ்க்கையில் சல்லிகாசு கூட யாசித்துப் பெற முடியாத படிப்புகள் ஏராளம் இங்கே உள, இளங்கலை வரலாறு, மொழியியல், கணிதம், புள்ளியியல் போன்ற படிப்புகள் முடித்ததும் ஒரு ரூபாய்கூட சம்பாதிக்கத் திராணியில்லாத படிப்பு, இவற்றில் மேற்படிப்பு படித்தால் ஒரு வேலை ஆசிரியராகவோ, ஒரு நிபுணராகவோ போக வாய்ப்பிருக்கிறது. ஆனால் இவற்றில் எத்தனைபேர் மேற்படிப்பைத் தொடர முடியும்? இந்த எல்லோரின் கடைசி முயற்ச்சியாய் இருப்பது இதுபோன்ற போட்டித் தேர்வுகள் தாம். அதை எழுதி எப்பாடு பட்டாவது ஒரு அரசாங்க உத்தியோகம் வாங்கிவிடுவது. அதிலும் இதுபோன்ற சில்லுருவிகளால் தடை வரும்போது கோபம் தலைகேருகிறது.


திராவிடன் துக்கத்தையும், கோபத்தையுமே வீரமாத்தான் சொல்லி பழக்கம். ஆனால் இங்கே வீரம் என்பது நயவஞ்சகமாய் காரியத்தைச் சாதிப்பது என்று வலியுறுத்தப் படும்போது நாம் இளைய தலைமுறையிடமிருந்து எப்படி ஒரு நல்ல சமூகத்தை எதிர்பார்க்க முடியும்.


சரி இந்த தவறு அடுத்த முறையும் நடக்காது என்பது என்ன நிச்சயம், இதற்க்கு முன்னமே கூட இப்படி நிறைய முறை நடந்திருக்கிறது எல்லா முறையும் தேர்வு எழுதியவர்கள்தான் தண்டனை அனுபவிக்கிறார்கள். இதற்க்கு டி.என்.பி.எஸ்.சி ஆணையத்திலேயே உள்ள ஏதோ ஒரு புல்லுருவி வுதவியிருக்கும். விசாரணை கமிஷன் வைப்பீங்க துறை ரீதியாக நடவடிக்கைன்னு சொல்லி ஒரு பதினைந்து நாள் அரை சம்பளத்துடன் விடுப்பு கொடுத்து மறுபடியும் அவனை வேலைக்கு சேர்த்துக் கொள்ளுவீர்கள். இது சரியான தண்டனையா....?


அப்படி யாரேனும் டி.என்.பி.எஸ்.சி ஆணையத்தில் இருந்து இதற்க்கு வுதவியிருப்பர்கலேயானால்...? அவர்களின் சம்பளங்கள் முடக்கப் பட வேண்டும், அவருக்கு வாழ்வாதார படி மட்டுமே (Basic Living Means) வழங்கப் பட வேண்டும், மேலும் அவருக்கு பணிக்குப் பிந்திய சலுகைகளும் நிறுத்தப் பட வேண்டும்.


அப்படியே குறுக்கு வழியில் தேர்வு எழுத வந்தவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளுங்கள், எந்த தேர்வும் வேண்டாம் ஆனால் அவர் கடைநிலை உழியனாக அலுவலகங்களை சுத்தம் செய்பவனாக சேர்த்துக் கொள்ளுங்கள். இவர்கள் எல்லோருடைய சான்றிதழ்களிலும் இவர் திருட்டுத்தனம் செய்து தேர்வெழுத முயற்ச்சித்தார் என்று ஸ்டாம்ப் செயுங்கள்.

சட்டங்கள் கடுமையாகாத வரை குற்றங்கள் குறையாது....!
;

காயடிக்கப்படும் பிஞ்சுகள்


நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது.  எல்லோருமே முதல் வகுப்பில் தேறிவிடுவதில்லை.  அவ்வாறு தேறுபவர்கள் எல்லோரும் வாழ்வில் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவதில்லை.  தோல்வியுற்றவர்களிலும் சிலர் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் வந்திருகின்றனர் என்பதை காலக் கண்ணாடி காட்டிய வண்ணம் உள்ளது.  ஆனால் இந்த இடுக்கை நமது சமூக அமைப்பும் அது ஒரு பள்ளி மாணவனின் மனதில் வேரூன்றச் செய்யும் எண்ணங்களையும் அதன் வீரியத்தையும் பற்றியது. 

பரீச்சையில் தோல்வி அடைந்தவனைப் புழுவைப் போல பார்கின்றனர்.  இங்கிருந்து ஆரம்பமாகும் இந்த வெற்றுப் பார்வை அந்த மானவனுடனே வளர்ந்து வேரூன்றி கிளைப் பரப்புகிறது.  ஒரு வித தாழ்வு மனப்பான்மையில் அந்த மாணவனைத் தள்ளி, அவனின் தனித்தன்மையையும், வாழ்க்கையின் மீதான அவனின் நம்பிக்கையையும் குலைத்து, குதறிப் போட்டுவிடுகிறது.

கல்வி செல்வம்

நடுத்தர மற்றும் அதற்க்கு கீழுள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பைத் தந்தால் அது அவர்களுக்கு மிகப் பெரிய சொத்து என்று நினைக்கிறார்கள்.  படிப்பு ஒரு ஊன்றுகோல்தான், ஆனால் இந்த நடுத்தர வர்க்கம் அதை வைத்து தங்கள் பிள்ளைகளை மந்திரவாதிப் போல் வித்தைக் காட்டச் சொல்லுகிறது.  படிப்பு இவர்களால் ஒரு அட்சயப் பாத்திரமாய் பார்க்கப் படுகிறது.  அதற்காக அவர்கள் தங்கள் சக்திக்கு, தகுதிக்கு மீறி செலவுகளைச் செய்யவும் தயங்குவதில்லை.  இந்த அதீத செலவுகள் அவர்களை நெருக்கும்போது அது பிள்ளைகளின் மேல் வேண்டாத வசவுளை உதிர்த்து அவர்களின் நடைமுறை சுழற்சியை எதிர்திர்த்திசையிலோ எடக்கு மடக்காகவோ சுழலச் செய்கிறது.  

தனியார் பள்ளிகளின் கொள்ளைகள்

தனியார் பள்ளிகள், பிள்ளைகளை ஒரு பொருளாகவே பார்க்கிறது.  அவர்களின் கணக்கில் எல்லா உருப்படிகளும் தேறிவிட வேண்டும் அப்பொழுதுதான் அடுத்த அடுத்த வருடங்களில் தங்களின் கட்டணத்தையும் உருப்படிகளின் எண்ணிக்கையையும் ஏற்றிக் கொள்ள முடியும்.  இந்த வியாபார நோக்கில் பிள்ளைகளின் வாழ்வாதாரம் நசுக்கப் படுகின்றது.  அதைப் பற்றி அவர்களுக்கென்ன கவலை, தங்கள் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றால் போதும்.

எந்த பள்ளியிலும் விளையாட்டு நேரம் சரியாகப் பகுக்கப் படவில்லை.  இந்த வயதில்தான் விளையாடவும் வேண்டும் ஆனால் இது எங்குமே வலியுறுத்தப்படவில்லை.  எல்லா பள்ளிகளும் ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடத்தையும், பதினோராம் வகுப்பிலேயே பன்னிரண்டாவது வகுப்பின் பாடத்தையும் நடத்தி பிள்ளைகளுக்கு மோலும் அழுத்தத்தை கொடுக்கின்றனர்.

அரசாங்கத்தின் ஏதேச்சதிகார போக்கு

மருத்துவம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவைதான் ஒரு நல்ல மக்கள் நல அரசால் மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும்.  இந்த மூன்றும் முறையாக வழங்காத நாட்டில் நல்ல குடிமக்கள் உருவாக மாட்டார்கள் என்பது திண்ணம்.  'என்னைப் பற்றி கவலைப் படாத நாட்டுக்கு நான் ஏன் செய்யவேண்டும்' என்ற எண்ணத்தை நாமே வலிந்து மாணவர்கள் மேல் திணிக்கின்றோம்.  இங்கே கண்ணைப் பறித்து கலர் டிவியும், கரண்டைப் புடுங்கி கிரைண்டர், மிக்சியும் தருகிறார்கள்.  அதையும் நாம் வரிசையில் நின்று வாய் பொத்தி வாங்கிச் செல்வோம், கொஞ்சமும் லஜ்ஜையே இன்றி. 

சமூகத்தின் சடுகுடு

ஊடகங்களும் தங்கள் பங்குக்கு நகைச்சுவை வாரம் தலைமேல் பாரம், வெல்லுங்கள் ஒரு கோடி, ஐ பி எல் என்று கலந்து கட்டி அடிக்கிறது.  கொஞ்சம் சமூக அக்கறையோடு யோசிப்பார்கலேயாயின்.... அவர்கள் இவை எல்லாவற்றுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுத்து, மாணவர்கள் படிக்க வகை ஏற்படுத்தித் தருவார்கள்.

ஆனால் ஊடகங்கள் கடந்த ஆண்டில் முதலாவது வந்தவரின் பேட்டி, ஏதாவது கல்வியியலாளர்களின் வழிகாட்டுதல், இதற்குப் பிறகு என்ன படிக்கலாம் போன்ற ஒரு சில வற்றைப் போட்டு தங்கள் கடமையை முடித்துக் கொள்கின்றன.

இவை எல்லாவற்றையும் தாண்டி வெற்றி பெறுவதென்பது மிக மிகச் சிரமமே!!, ஆனால் சிலர் வெல்கிறார்கள்.  இங்கே நாம் அவர்களைப் பற்றி பார்க்கவில்லை.  ஏதோ ஒரு பாதிப்பில் தேர்வில் சறுக்குபர்வர்கலையே நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.  அவர்களின் நிலை பாவம் சமூகம் அவர்களைப் பார்க்கும் பார்வையே வேறு மாதிரியாக இருக்கிறது.  "என் பைய்யன் அதில் இத்தனை மார்க்கு, இதில் இத்தனை மார்க்கு" என்று மார்தட்டிப் பெருமை படும் பெற்றவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த பிஞ்சுகளை மலடாக்கிச் செல்லுகிறார்கள்.

படிப்பில் தொல்வியுருபவன் வாழ்க்கையே அஸ்தமித்து போய்விட்டதாக ஒரு மாயையை உருவாக்கி இருக்கிறோம்.  அதை முதலில் உடைத்தெறிய வேண்டும் ஏதோ ஒரு காரணத்தால் தொல்வியுருபவனை தேற்றி, நீயும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்று ஆறுதல் சொல்லி திரும்ப முயற்சித்து ஜெயிக்க.... பெற்றோரும், நண்பர்களும், உற்றாரும் உதவவேண்டும்.  இல்லையேல் இது அப்படியே படிமை நிலையாகி, நாளை வளரும் மொட்டுகளை அமுக்கிவிடும் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை.  படிப்பும் வாழ்க்கையில் ஜெயிக்க முக்கியம் ஆனால் அது மட்டுமே நம் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை என்பதை இவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

இது எல்லா பக்கமிருந்தும் நடை பெறவேண்டும்.  பெற்றோர், பள்ளிகள், ஆசிரியர் மற்றும் சமுதாய அணுகுமுறை ஆகிய தளங்களில் இருந்து இன்றே நடைபெறவேண்டும்.  இல்லையேல் நாம் நம் எதிர்கால சந்ததிக்கு தீங்கிழைத்ததாக நாளைக்கு வரலாறு பதியப் படலாம்.



;
 

Blogger