Pages

முழிச்சிக்கோ சகோதரா முழிச்சிக்கோ....

முன்னெல்லாம் குடியரசு நாளன்று கருக்கலிலே எழுந்து, சூரியனையே துயில் எழுப்பி, பந்துக்களோட மெரீனா கடற்கரைக்குச் சென்று குடியரசுதின அணிவகுப்பை பார்பதென்பது எங்கள் நாள்காட்டியில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும். அரைக்கால் பருவத்திலிருந்து பதின்ம வயதுவரை கிட்டத்தட்ட எல்லா வருடமும் பதிவேட்டில் எங்கள் குடும்பத்தின் பெயர் இருக்கும்.

நாங்கள் கடற்கரையை ஒட்டி இருப்பதால் போகிறோம் என்று நினைத்தால்... சில நேரங்களில் போரூர், பூந்தமல்லி என்று தொலை தூர இடத்திலிருந்தும் மக்கள் வருவார்கள். காலை உணவு, நொறுக்குத் தீனி கட்டி எடுத்துக் கொண்டு, ரோட்டோரத்தில் உட்கார்ந்து அணிவகுப்பை பார்பதென்பது ஒரு திருவிழாக் கோலம். அது முடித்து வீடு வந்ததும், தில்லியில் நடக்கும் அணிவகுப்பை முழுவதும் பார்த்து முடிப்போம். அந்நாளில் ஒரு முறையேனும் தில்லி சென்று அணிவகுப்பை நேரில் பார்க்க வேண்டும் என்று எண்ணம், ஆனால் அது இன்று வரை நடக்கவில்லை.

வருடத்தில் ஒரே ஒரு நாள் சில மணி நேரங்கள் மட்டுமே நடைபெறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு, ஒரு சிறந்த வியாபார தளமாகவும், சிறு சிறு வியாபாரிக்கு அமைகிறது, பலூன், மூங்கில் ஊதுகுழல், பாப்கான் என்று ஒரு கிராம திருவிழாக்கான எல்லா அம்சத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தது.

பத்து நாளைக்கு முன்னிருந்தே அணிவகுப்புக்கான ஒத்திகைகள் நடக்கும் கடற்கரை சாலை வழித்தடம், காலை போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்து, எல்லா வாகனங்களும் திருவல்லிக்கேணி சாலை வழியாக நெருக்கியடித்து போகும். ஒத்திகை முடிந்து இந்த அலங்கார ஊர்திகள் வெலிங்டன் சீமாட்டி பள்ளியிலும், காவல்துறை ஆய்வாளர் அலுவலகத்திலும் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும், அதை பார்க்கவே நிறைய கூட்டம் கூடும்.

என் தந்தை தோள்மேல் இருந்து பார்த்தது முதல், இன்று நான் தந்தையாய் என் மகன்களை உயர்த்திக் காட்டுவதேன்பதே அலாதி ஆனந்தம். எத்தனை சண்டைகள், கூக்குரல்கள் ஏண்டா சனியனே என் காலை மிதிச்சென்னு தொடங்கி... ஊரில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளும் சரளமாய் விளையாடும்.

ரோமியோக்களுக்கு இது தெய்வ தரிசனம், கன்னிகளும் கண்ணண்களும் புத்தாடை என்ன, புதுப் பொலிவு என்னான்னு ஒரு தினுசாத்தான் சுத்துவார்கள். "மச்சான் என் ஆளு முறுக்கு கொடுத்தாடா இந்தா சாப்புடுன்னு" சொல்லி முறுக்க பாஸ் பண்ணி, மயில பிக்கப் பண்ண க்ளோசப் உலகில் இருப்பார்கள். கன்னிகளும் கண் ஜாடை கை ஜாடை காட்டி, கவருவார்கள். கன்னிகளின் அப்பன்களும், அண்ணன்களும் தங்கள் கோல்கேட் வலயத்தால் எல்லைச் சாமியாக காவல் இருப்பார்கள். இதையெல்லாம் மீறி பல பக்கங்களிலிருந்து பறக்கும் முத்தம் காற்றில் மிதந்து மார்கழி மாசத்தையே மப்புள சுத்த வைக்கும்.

அணிவகுப்பில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு அரசு மற்றும் காவல் துறையும் தத்தமது சாதனைகள், செயல்பாடுகளை விளக்கும் வண்ணம்..., காட்சிப் படுத்தப் பட்ட அலங்கார ஊர்தி, கலாச்சார நடனம் என்று ஒரு ஆண்டில் தமிழ்நாட்டின் இல்லை இந்தியாவின் முக்கிய பதிவாக இது விளங்குகிறது.

பார்வையாளனாய் இருந்து, பள்ளி, கல்லூரி நாட்களில் பங்கேற்பாலனாய் இருந்தவரை, காந்திசிலையிலிருந்து... கண்ணகி சிலை வரை கூட்டம் அம்மும். ஆனால் இப்பொழுதெல்லாம் விவேகானந்தர் இல்லம் வரை கூட கூட்டம் இருப்பதில்லை. இதற்க்கு முக்கிய காரணம், இரவு வெகு நேரம் வரை தொலைகாட்சி பார்த்து விட்டு, உச்சி வெயில் குச்சி வச்சி எழுப்பும் வரை மக்கள் தூங்குகிறார்கள். டிவி மனிதனின் வாழ்கையில் ரொம்பவே ஆதிக்கம் செலுத்துகிறது. மக்களுக்கும் பொறுமை இல்லை எல்லாம் தங்கள் வரவேற்பறைக்கே வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்,
இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்.....

ஜெய் ஹிந்த்!!!
;

குப்ப மேட்டரு......

ஆணி புடுங்குரதுலையே முழு நேரமும் கழிந்ததால இவ்வளவு நாள் பதிவு பக்கமே வர முடியவில்லை. ஆனா தவறாம எல்லா முக்கிய பதிவுகளையும் படிக்க முடுந்தது. ஒரு வாரம் சென்னையை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனா கால் எட்டும் தூரத்தில் கடல் இருந்தும் கடலைப் பார்க்க முடியல. நண்பர்களைக் கூட சந்திக்க முடியவில்லை.
------xxx-----xxx------xxxx-----
சமீபத்திய பாடல்களில் ஆடுகளத்தில் S.P.Bala, S.P.Charan & Prashanthini பாடிய "ஐயய்யோ நெஞ்சம்" என்கிற பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. சிம்பிள் ட்யுனாத்தான் இருக்கு, ஆனா ரொம்ப நல்லா இருக்கு. அநேகமாக காதல் கிறக்கத்தில் பாடுவதாக இருக்கும்போல் இருக்கிறது. இந்த பாட்டு அப்பா மகன் இருவரின் கிறங்கடிக்கும் குரல்களுக்காகவே மிகமிகப் பிடித்திருக்கிறது.

அடுத்து எத்தனையோ தாய் பாடல் வந்திருந்தாலும் Thenmarku Paruvakaru படத்தில் வைரமுத்து வைர வரிகளில் விஜய்ப்ரகாஷ் பாடி ரத்தினம் என்கிற புது இசைஅமைப்பாளர் இசைஅமைத்து நெஞ்சைக் கரைக்கிறது. இது தெற்கத்தி தாய்களை கண்முன்னே நிறுத்துகிறது. "கல்ல புழிந்து காஞ்சி ஊத்தினா" ஒரு வரியும், "மண்ண கிண்டித்தான் பொழைக்கிறா உடல் மக்கி போற மட்டும் ஒழைக்கிரான்னு" அந்த பகுதி தாய அப்படியே பிரதிபலிக்கிற பாட்டு.
------xxx-----xxx------xxxx-----
சென்னையில் புத்தக திருவிழா நடக்கிறது போகமுடியலையேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு ஆனா நண்பர்கள் கொடுத்தது, நானா விரும்பி வாங்கியதுன்னு இருக்க நிறைய புத்தகங்களே இன்னும் நிறைய படிக்காமல் பரணில் இருக்கு இருந்தாலும் ஆசை யாரைத்தான் விட்டுது. குறைந்த பட்ச பலனாக சில பதிவர்களையும், எழுத்தாளரையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்திருக்கும், என்ன செய்ய திரைகடலேறி ஆணி புடுங்கும்போது இந்தமாதிரி இழப்புகள் இருக்கத்தான் செய்கிறது.
------xxx-----xxx------xxxx-----
கட்டக் கடைசியாக அனைத்து வலையுலகவாழ் மக்களுக்கு என் இதயங்கனிந்த பொங்கல் நல வாழ்த்துக்கள். ;
 

Blogger