Pages

North 24 Kaantham - மலையாள சினிமா



பொதுவாகவே பயணங்களை வைத்து எடுக்கப்படும் படங்களில் அன்பை அடிநாதமாக வைத்து தைத்திருப்பார்கள்.  இதுவும் அவ்வாறே. 

ஃபஹத் ஃபாசில் Obsessive Compulsive Personality Disorder இருக்கும் ஒரு மென்பொருள் இளைஞ்சர்.  அவரின் சிடுசிடுப்பாலும் அதீத சுத்த பத்த நடவடிக்கைகளாலும் அவரை யாருக்குமே பிடிக்காமல் போகிறது.  அவரது அலுவலகத்தில் அவரை தந்திரமாக திருவான்றத்துக்கு ஒரு'Webinaar'காக அனுப்புகிறார்கள்.

ரயிலில் பெரியவர் நெடுமுடி வேணு; தன் மனைவிக்கு உடம்பு முடியாத நிலையில்... திரும்பி தன் வீட்டுக்கே போக எத்தனித்து; எதிர்வரும் நிறுத்தத்தில் இறங்குகிறார்.  அவருடன் சமூக சேவகி சுவேதாவும், நம்ம ஃபாசிலும் இறங்குகிறார்கள்.  அவர்கள் நெடுமுடி வேணு வீட்டிற்கு எப்படி திரும்புகிறார்கள் என்பதை மிக மிக சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கேரளாவில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கண்டிப்பாக கடையடைப்பு, வேலை நிறுத்தம் என்று இருக்கும்.  இவர்கள் மூவரும் அவ்வாறு ஒரு வேலை நிறுத்த நாளில்தான் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள்.  யாரோ சில அயோக்கிய அரசியவாதிகளின் சுயநலத்தில் பொதுமக்களின் அன்றாடம் எப்படி கலைத்துப் போடப் படுகிறது என்பதில்தான் படம் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பயணத்தில் ரயில், பேருந்து, படகு, தோணி, ஆட்டோ போன்ற கேரளாவின் எல்லா வகையான போக்குவரத்தையும் கொண்டுவந்திருப்பது இயக்குனரின் வெற்றி.


பாதி 'அந்நியன்' அம்பியும், மீதி சுத்த விரும்பியுமான ஃபாசில் இந்த பயணத்தில் எப்படியெல்லாம் கொஞ்ச கொஞ்சமாக மாற்றம் பெறுகிறார்; என்பதை அவர்களுடன் பயணிக்கும் நாமே யூகிக்க முடித்தது போன்ற திரைகதை அற்புதம்.

நெடுமுடி வேணுவின் பன்மொழித்திரமை, உறவுகளை; உயிர்களை நேசிக்கும் பாங்கு, தேர்ந்த வாசிப்பனுபவம் என்று போகிற போக்கில் அவரின் அனுபவம் அரசியல் சார்பு என்று எல்லாவற்றையும் மிக நேர்த்தியாய் பார்வையாளனுக்கு கடத்திச் செல்கிறார் இயக்குனர்.

இந்த மாதிரி படத்தில் கண்டிப்பாக பிரதான உதவி ஒரு சமூக சேவகர் / சேவகி மூலமாகத்தான் வரும்.  இதிலும் நாயகி ஸ்வேதா அவ்வாறே வருகிறார் ஆனால் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.

ஸ்டின்ட் கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள், கதையில் திருப்புமுனையே என்னால்தான் அதனால்தான் இதில் நடித்தேன்... என்று அளந்து விடுவார்கள், ஆனால் உண்மையிலேயே நம்ம பிரேம்ஜி அமரனுக்கு இதில் கதையை சரியான போக்கில் திருப்பும் விசையான கதாபாத்திரம்.  நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள் பிரேம்ஜி, இதில் என் கதாபாத்திரம்தான் கதையின் திருப்புமுனை என்று. 

அவர் மனைவியாக வரும் கனியின் ஒரு வெட்கப் புன்னகை ஆயிரம் கால காதலை அரைநொடியில் உணர்த்திவிடுகிறது.

இயக்குனர் அனில் ராதாக்ருஷ்ண மேனனின் முதல் படம்; அசத்தியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டியப் படம் என்பதில் ஐய்யமேதுமில்லை.

Directed byAnil Radhakrishnan Menon
Produced byC. V. Sarathi
Written byAnil Radhakrishnan Menon
Starring
Music byGovind Menon, Rex Vijayan
CinematographyJayesh Nair
Editing byDilip

 


 
;

50 SHADES OF GREY - புத்தக விமர்சனம்



ஏறாடிக் வகை நாவலுக்கும் போர்ன் வகைக்கும், ஒரு சின்ன இடைவெளிதான் மனித உணர்ச்சிகளை காமத்துடன் அப்பட்டமாக சித்தரித்தால் அது ஏறாடிக் வகை, அப்படி இல்லை எனில் அது போர்ன் வகையில் சாரும்.
 
(ஊம்) என் ரத்தம் சூடேறியது, கால்கள் விறைத்துக் கொண்டன, என் பெண்மையை தூண்டின... போன்ற  மாசாலாக்களைத் தூவி அழகுபடுத்தினால் அது ஏறாடிக் வகை
இல்லாமல் தட்டையாக காமத்தை மட்டும் செப்புமானால் அது சரோஜாதேவி வகையில் சேர்க்கப் படுகிறது. 
 
இந்த நாவல் முதல்வகையில் சேர்கிறது ஏனென்றால் இதில் மானே தேனே போட்ட காமம் வருகிறது.  இது முப்பது நாடுகளில் எழுபது மில்லியன் வரை விற்பனைக் கண்டது, அதிவிரையில் விற்றுத் தீர்ந்தது. 
 
இது BDSM வகை புணர்வுகளை கொண்ட கதை.  (அப்படின்னா.... கமத்தோட மானே தேனே போட்டு உணர்வுகளுடன் பரிமாறப் பட்ட நாவல்).  சரளமான எளிய ஆங்கிலத்தில் சரியான விவரணைகளுடன் ஒரு கல்லூரி மாணவிக்கும் அழகான ஒரு மிகப் பெரிய இளம் வியாபார காந்தத்துக்கும் இடையேயான காதலுடன் கூடிய வதைப் புணர்வுகளை சொல்லிச் செல்கிறது. 
 
 அனா ஸ்டீல் வாஷின்டன் ஸ்டேட் யுனிவர்சிடியில் கடைசி பரிச்சைக்காக தன்னை தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், தன அறைத்தோழி கேட் செய்யவேண்டிய ஒரு நேர்காணலை செய்ய முதன்முதலில் கிறிஸ்டியன் க்ரேயை சந்திக்கிறாள், அது முதல் தொட்டு, அவர்கள் எவ்விதமெல்லாம் வகை வகையாகப் புணர்கிரார்கள் என்பதை எளிய நடையில் சொல்லிச் செல்கிறார் எல் ஜேம்ஸ்.

நாயகனும் நாயகியும், பார்த்த மூன்றாவது சந்திப்பிலேயே உறவு கொள்கிறார்கள்.  அனா தன் தத்துத் தந்தையை சிலாகிக்கிறாள், அவர் அவளது கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு வந்து அனாவின் காதலனையும் சந்திக்கிறார்.  இவர்கள் இருவருக்குமான உறவென்பது உன்னதமான தந்தை மகளுக்குமான உறவாக மிக நுட்பமாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

ஆனாலும் அனாவின் தாய் இப்பொழுது வேறு ஒருவருடன் இருக்கிறாள்.  அது எந்த விதத்திலும் அனாவின் தத்துத் தந்தை 'ரே'யை பாதிக்கவில்லை.  இங்குதான் இது ஒரு சிறந்த கலை நேர்த்தியான நாவலாக உருமாறுகிறது.  உறவுகளை அதனதன் போக்கில் புரிந்துகொண்டு சீரான நேர்கோட்டில் பயணிக்க வைக்கிறது.

ஒப்பந்த அடிப்படையில் உறவென்பது அனாவுக்கு உடன் பாடில்லைதான், ஆனால் அனா கிரேவின் பால் கொண்டுள்ள அதீத காதலால் அவனுடனான உறவை தொடர்கிறாள்.  இந்த குற்ற உணர்வு அவர்கள் ஒவ்வொரு உறவின் முடிவிலும் மரம்கொத்திப் போல் அவள் மனம் கொத்தி எடுக்கிறது. 

உறவின் முடிவில் தன்னைத்தானே அவள் சமாதானம் செய்வதுபோல் வாசகர்களையும் தன் பாத்திரத்தின் நிலையை உணரச் செய்கிறாள்.
 
இதன் இந்த வெற்றிக்கு இதை எழுதிய ஆசிரியர் பெண்னென்பதும் ஒரு காரணம்.  ஜேம்ஸ் ஒரு மீடியா பெர்சனாலிட்டி.  1987இல் திருமணம் ஆகி இரண்டு வாலிப மகன்கள் உள்ளார்கள்.

தமிழில் இதுபோல் வா மு கோமு, சாரு ஆகியோர் முயற்சிக்கிறார்கள், ஆனால் அது ஒரு ஆணின் பார்வையில் இருந்து சொல்லப்படுவதனால்... ஒரு சிறிய தயக்கமோ, அல்லது ஒட்டுதலோ இல்லாமல் இருக்கிறது.
;

சால்ட் & பெப்பர் - என் பார்வை



சில படங்கள் பார்க்கவேண்டிய லிஸ்டில் இருக்கும் ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அது அப்படியே கிடப்பிலேயே இருக்கும்.  என்ன செய்வது என்று தெரியாத; புட்டத்தை  தரையில் வைத்து, விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாளிலோ அல்லது எதையோ தேடும்போதோ; அது நம் கண்ணில் பட்டு அன்றைய தினம் அதற்க்கு பிறவிப் பயன் கிட்டி, நம் பார்வைக்கு விரியும்.

அவ்வாறே இந்த படம் பார்க்கவேண்டும் என்று விரும்பியே டவுன்லோடினேன்.  ஆனால் விடுமுறைகள், ஊர்சுற்றுதல் என்று ஒரு இரண்டு மாதமாக படங்களே பார்க்க முடியவில்லை.  அண்ணன் ராஜு இந்த படத்தைப் பற்றி விமர்சனம்  எழுதியதுமே அட!! இந்த படம் நம்மிடமே இருக்கே..? என்று தோன்றியது, அன்றிரவே அதைக் கண்டு களித்தேன்.

பதின்பருவத்தில் சில காலம் தின்பதர்க்கே உயிர் வாழ்ந்தேன் என்று சொல்லலாம்.  அனால் இப்பொழுது பல நேரம் பச்சை காய்கறிகள்தான் (பின்ன வயிறு வண்ணான் சால் போல் பெருத்துக்கொண்டே போனால்).  நாக்குலே வாழ்ந்த காலம் போய்  இப்போ வாக்குலே (WALKING) வாழ்கிறேன்.

ருசிக்குத் தின்பவனைவிட பசிக்குத் தின்பவன்தான் நம்நாட்டில் அதிகம்.  ஆனாலும் முதல் கவளம் வயிற்றை அடைந்ததும்..., நாக்கு ருசியைத் தேடும்.  இந்தப் படமும் அப்படி ஒரு சுவை தேடும் படலமே.

பெயர் போடும்போதே பல வகை உணவுகளை காட்டிக்கொண்டே வருகிறார்கள்.  நாக்கில் வாட்டர் பால்ஸ் வந்து வீடே ஈரமானதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.  புட்டு, நேந்திரம்பழ பஜ்ஜி தவிர்த்து வேறு எந்த உணவின் பேரும் எனக்குத் தெரியவில்லை; ஆமா பேரா முக்கியம் அள்ளி அள்ளி சாப்பிடுவதை விட்டு விட்டு என்ன பேச்சு.

ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஏதாவது ஒரு உணவு வருவதுமாதிரி பார்த்துப் பார்த்து எடுத்திருக்கும் விதத்தை வைத்தே டைரெக்டரின் விருப்பத்தை தெரிந்து கொள்ள முடிகிறது. 

இரு காதல் கதை, அதில் ஒன்று நடுவயது காதல்.  அது பூக்கும் விதமும் நாளொரு சுவையும் பொழுதொரு சமயளுமாய் சமைகிறது.  லாலும் சுவேதா மேனனும் தத்தமது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.  அருமையான திரைகதை அமைத்து இல்லை இல்லை சமைத்து பரிமாறி இருக்கிறார் ஆசிக் அபூ.

லால் பார்க்கப் போகும்போது, அங்கே குழி அப்பம் வைக்கிறார்கள், லால் பெண்ணிடம் "யார் இதைச் செய்தது...?" என்று கேட்கிறார் பெண் "தான்தான்" என்று சந்தேகமாக தலை அசைக்கிறார்.  மறுமுறை லால் கேட்கவும் "இல்லை! வேலைக்காரன்" என்று சொல்கிறார்.  லால் "சமையலறை எங்கிருக்கிறது...?" என்று கேட்டு அங்கே போகிறார்.  அங்கே மாவாட்டிக் கொண்டிருக்கும் பாபுராஜைப் பார்த்து லால் "என்னோடு வரியா....?" என்று கேட்கிறார் உடனே பாபுராஜ் கிளம்பி வந்துவிடுகிறார்.  லால் பாபுராஜ் நடுவில் உள்ள பாசப் பிணைப்பு அற்புதம்.

இதை பிரகாஷ்ராஜ் தமிழில் எடுக்கிறாராம் கண்டிப்பாக இது ஒரு FEEL GOOD MOVIE.
;
 

Blogger