Pages

மோடி மஸ்தானுக்கு கோடிகளில் பணம்

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


நல்லா கூட்டம் கூடும் இடங்களில் சினிமா தியேட்டரோ, கோயில் எதிரிலோ..... ஐய்யா மார்களே....! அம்மா மார்களே...! மாயமில்ல மந்திரமில்ல எல்லாம் நிஜம். இங்கேப் பாருங்கோ இது தலைச்சான் பிள்ளை மண்டை ஓட்டுல செஞ்ச தாயத்து, இத கையில கட்டிகிட்டா உன்ன எந்த பேய் பிசாசோ, காத்து கருப்போ அண்டாது சாரே, இத்த போட்டு நீ ராத்திரி சுடுகாட்டுக்குக் கூட போலாம் எதுவும் உன்ன ஒன்னும் செய்யாது சாரே!!.

பாரு சாரே இந்த கீரிக்கும் பாம்புக்கும் சண்டை உடுவேன் சாரே, இந்த நூறு ரூபா நோட்ட கொளுத்தி அப்படியே திரும்ப எடுப்பேன் சாரேன்னு பல வித வித்தைகள அடுக்கடுக்கா வச்சி தெருவோரம் வித்தை காட்டுவதை பார்த்திருப்பீர்கள். தான் கடை விரித்திருக்கும் மொத்த நேரமும் பேசியே.... போக்கி விட்டு, தாயத்து விற்கவும், மை விற்கவும் ஆரம்பித்து விடுவான், கடைசி வரை கீரிக்கும் பாம்புக்கும் சண்டை நடக்காது.

ஆனால் சில நேரங்களில் வேடிக்கைப் பார்த்தவர்களின் பணம், நகை கொள்ளையடிக்கப் பட்டிருக்கும் கூட்டம் முடிந்து அவர்கள் தேடும்போது அவன் பாரீசே போயிருப்பான். ஆனாலும் ஊரில் எங்கே இதுபோல் புரளி வித்தை காட்டினாலும் அது எவ்வளவு தூரமானாலும் நடந்தே சென்று முழுதும் முடியும் வரை பார்த்து வருவது வழக்கம். பாக்கெட்டில் இருந்து பத்து பைசா போட்டு விட்டு வருவோம். இப்பொழுதெல்லாம் அதுபோல் ஆட்களைப் பார்ப்பதில்லை, அவர்கள் காட்சிப் பொருளாக சினிமாவிலும், சீரியலிலும் வருகிறார்கள்.

ஆனால் இதுபோல் புரளி வித்தை காட்டுபவர்கள் இப்பொழுது விஸ்வரூபமெடுத்து பெரிய கார்பரேட் நிறுவனங்களைப் போல் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை பெருக்கிக் கொள்கிறார்கள். தங்கள் பெயருக்கு பின்னாலோ முன்னாலோ ஒரு அடை மொழியை வைத்துக் கொண்டு தான்தான் காடவுளின் அவதாரம் என்று கலர்கலராக ரீல் விட்டு, கட்டு கட்டாக கல்லா கட்டுகிறார்கள்.

இதில் ஹிந்து, முஸ்லீம், கிருத்தவர் என்ற பேதமெல்லாம் இல்லை, எல்லா மார்கத்திலும் இதுபோல் போலிகள் உண்டு. அது போல் ஒருவர்தான் இந்த நித்யானந்தா. அவரது சமீபத்திய ஸ்டன்ட் முந்தா நாள் குரு பூர்ணிமா அன்று பக்தர்களை புவியீர்ப்பு விசையை மீறி அந்தரத்தில் பறக்க வைப்பது. இதில் கலந்துகொள்ள பணமெல்லாம் வசூலிக்கப் பட்டது (அதற்கான அழைப்பிதல்). அவரது முதன்மை பிரபல்ய சீடர்களில் ஒருவரும், சமீபத்தில் டிவிக்களில் தெரிய... ஓர் இரவு அவருடன் அறையைப் பகிர்ந்தவருமான ரஞ்சிதாவும் இருந்தார்.

எல்லோரும் எம்பி எம்பி குதித்து அந்தரத்தில் மிதக்க முயற்சித்தார்கள் ஆனால் முட்டி தேய்ந்ததும், மூச்சி வாங்கியதும்தான் மிச்சம், ஒருவரும் மிதக்கவில்லை. மோடி மஸ்தான்போல் கடைசிவரை தான் சொன்னதை தனக்கோ அல்லது தன் பக்தர்களுக்கோ ஏற்படுத்தவில்லை. பரவச நிலை அடைவோம் என்று பணம் காட்டியவர்கள் எல்லாம் பர்சை காலி ஆக்கியதுதான் மிச்சம்.

அடுத்த முறை வேறொரு வித்தையின் பெயரை சொல்லி தன் பெட்டியை நிரப்புவார்கள். இதற்கெல்லாம் முக்கிய காரணம் இவற்றை நம்பி அவர் பின்னல் போகும் மக்கள்தான்.


ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
;

No comments:

 

Blogger